ஜனவரி 20ல் கூடும் சட்டசபை.. தமிழக அரசின் உரையை ஆளுநர் வாசிப்பார்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: 2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டம் தொடங்கும் என்று கூறிய அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டசபையில் வாசிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டம் ஜனவரி 20ல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி கூடுகிறது. காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.

அதன்பின் அன்றைய தினமே சட்டசபைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டசபைக் கூட்டத்தொடர், ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை 4 நாட்கள் ஆளுநர் உரைய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடக்கவுள்ளது.
இதன்பின் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை மீண்டும் கூட உள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கும். இதனால் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும். இந்தக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இம்முறையாவது தமிழக அரசின் உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருமுறை கூட தமிழக அரசின் உரையை வாசித்ததே இல்லை. கடந்த முறை தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை சபாநாயகர் அப்பாவுவே வாசித்தார்.
இதனால் தேர்தலுக்கு முன் நடக்கும் சட்டசபைக் கூட்டத்திலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வரும் சூழலில், இந்த சட்டசபைக் கூட்டத்தில் என்ன நடக்கும் என்று காண்பதற்கு பலரும் எதிர்நோக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications