நீட் விலக்கு மசோதா: பிப்.8 ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுகிறது- சபாநாயகர் அப்பாவு
சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாவை அனுப்பி வைக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு தினங்களுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அரசுக்கு விளக்கம் அளித்தது. இதையடுத்து தமிழக சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக, புரட்சி பாரம் கட்சிகள் தவிர 10 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவிப்பார் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிப்ரவரி 8- ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுகிறது. அன்றைய தினம் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். சட்டசபை கூட்டப்பட்டு இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications