திமுக அரசை கண்டித்து.. ஜூலை 5இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்! தமிழக பாஜக அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், அதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திமுக, கம்யூனிஸ்ட்களுக்கு செலக்டிவ் மதசார்பின்மை நோய் இருக்கு.. பாஜக வானதி சீனிவாசன் பரபர அறிக்கை
வாக்குறுதிகள்
இருப்பினும், ஆட்சி அமைத்து ஓராண்டிற்குப் பின்னரும் கூட திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகச் சாடி வருகின்றன. குறிப்பாகத் தமிழக அரசின் செயல்பாடுகளையும் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தமிழக பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
உண்ணாவிரதப் போராட்டம்
இந்தச் சூழலில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் ஆட்சி அமைத்து ஓராண்டிற்குப் பின்னரும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் தமிழக பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் திமுக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் தழுவிய போராட்டம்
தமிழகம் முழுவதும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வட சென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். சென்னை கிழக்கில் எம்.என்.ராஜா, மத்திய சென்னை கிழக்கில் வினோஜ் பி.செல்வம், மத்திய சென்னை மேற்கில் சக்கரவர்த்தி ஆகியோர் போராட்டத்தை முன்னின்று நடத்த உள்ளனர்,
நிர்வாகிகள்
அதேபோல சென்னை மேற்கில் கரு.நாகராஜன், திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி , தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஈரோடு தெற்கில் டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.