"ஒரு நாளில் ஒன்னும் ஆகாது! நிறைய பட்டாசு வெடியுங்கள்.. ஏன்னா அது நம்ம கலாசாரம்!" சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துகளுடன் சேர்ந்து பட்டாசுகள் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகத் தீபாவளி உள்ளது. இந்தாண்டு வரும் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வார இறுதியுடன் வருவதால் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடப் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
சசிகலா + எடப்பாடி.. கிளியர் சிக்னல் தந்த காவி.. எங்கே போவீங்க? பட்டென கேட்ட அண்ணாமலை! கவனிச்சீங்களா?
தீபாவளி
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகத் தீபாவளி பண்டிகை பெரியளவில் கொண்டாடப்படவில்லை. கடுமையான கட்டுப்பாடுகள் உடன் தான் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப் பொதுமக்கள் தயாராகி விட்டனர். கடந்த சில நாட்களாகக் கடை வீதிகளில் அள்ளிய கூட்டமே இதற்குச் சாட்சி.
பட்டாசு
அதேநேரம் தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடித்தால் காற்று மாசு ஏற்படும் என்பதால் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டாசுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் ஒட்டுமொத்தமாகவே பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் பசுமை பட்டாசுகள் மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகள் இப்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேரக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
கோரிக்கை
மேலும், ஒலி மற்றும் காற்று மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது. விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், காற்று மாசுக்கு பட்டாசு தான் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் இதனால் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் சிவகாசி பட்டாசு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அண்ணாமலை
இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துகளுடன் சேர்ந்து பட்டாசுகள் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மத்திய அரசின் "ரோஸ்கர் மேளா" வேலைவாய்ப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் அரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 250 இளைஞர்களுக்குப் பணி ஆணையை வழங்கினார்.
பிரஸ் மீட்
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் கூறும்போது, கடந்த ஆண்டு மட்டும் தமிழ் வழியில் பயின்ற 52,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பயிற்று மொழி தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பித்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக தமிழ் வைத்து வியாபாரம் செய்வதாகவும் சாடினார்.
நமது கலாசாரம்
கடைசியில் தீபாவளி பற்றிய பேசிய அவர், " அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.. தமிழக மக்கள் இன்பம் பெருகட்டும். அனைவருக்கும் மன அமைதி கிடைக்கட்டும். நிறையப் பட்டாசுகளை வெடியுங்கள். சிவகாசி மக்கள் நிறையக் கஷ்டப்படுகிறார்கள். அங்கு 8 லட்சம் பேர் இதை நம்பி உள்ளனர். எனவே, அதிக பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள். பட்டாசு வெடிப்பது என்பது நமது கலாசாரம்.
நிறைய பட்டாசு வெடியுங்கள்
ஒரு நாளில் எதுவும் ஆக போவது இல்லை. வருடம் முழுக்க ஓடும் வாகனங்களினால் ஏற்படாத காற்று மாசா ஒரே நாளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படப் போகிறது. இப்போது வீட்டில் படித்தவர்கள் எல்லாம் ஏதோ காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி பட்டாசுகளை வாங்கி தர மறுக்கிறார்கள். ஒரு நாளில் எதுவும் ஆக போகிறது இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் செல்கிறது. எனவே, சிவகாசி வாழவும் தமிழகம் வாழவும் நிறையப் பட்டாசுகளை வெடியுங்கள்" என்றார்.