"பொறுமையாக இருக்கிறோம்.. ஆனா.. அதற்கும் ஒரு எல்லைதான்.." தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லாமல் போய்விட்டதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சி தற்போது பொறுமையாக உள்ளது என்றும் ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு என்றும் தெரிவித்தார்.
Recommended Video
கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்குச் சென்ற போது குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திருச்சியில் உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

பிபின் ராவத் அஞ்சலி
இந்நிலையில் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு நிகழ்வு. அமைச்சர்கள், மாணவர்கள் என அனைவரும் இதற்காகக் காத்திருந்தனர். இதனால் தான் ஆளுநரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அது ஆளுநரின் தனிப்பட்ட முடிவு. என்னைப் பொறுத்தவரை இதில் தவறு இல்லை. அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். தமிழக மக்களும் பாஜகவினரும் எழுச்சிமிகு பிரியா விடை கொடுத்தனர். இதை அரசியலாக்குவது தேவையில்லாதது ஒன்று. ஆளுநர் அரசு நிகழ்வில் தான் பங்கேற்கச் சென்றிருந்தார்" என்றார்,

மாரிதாஸ் கைது
அதேபோல யூடியூபர் மாரிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "திமுக ஐடி அமைப்பைச் சேர்ந்தவர்கள், நிர்வாகிகள், மற்ற திராவிட அமைப்பினர் என்னவெல்லாம் பேசியுள்ளனர் தெரியுமா? அவர்கள் பேசிய கருத்துகள் எல்லாம் என்னிடம் உள்ளது. பிபின் ராவத் உயிரிழப்பு குறித்துப் பல பொய் கருத்துகளை அவர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை இல்லை
மாரிதாஸ் மீது 124 ஏ சட்டப்பிரிவின் கீழ் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், இவர்கள் பேசியதெல்லாம் அதை விட 100 மடங்கு மோசமான கருத்துகள். அதுமட்டுமின்றி பிபின் ராவத் இறந்தது சரி என்று திக துணை கழகங்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், இங்குள்ள அரசுக்கு அதைக் கண்டுகொள்வதில்லை. தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சினை ஆக்குகிறார்கள்.

டிஜிபி கட்டுப்பாட்டில் இல்லை
இங்குத் தமிழகத்தில் போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் இங்கு தமிழக டிஜிபி உள்ளார். தமிழகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர் நேர்மையான டிஜிபியாக இருந்தால் பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிபின் ராவத் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அதைக் கொண்டாடிப் பதிவிடுகிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இவர்கள் மீது டிஜிபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் தமிழக காவல் துறை டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. இவை எதுவும் காவல் துறையினர் தானாக வந்து பதிவு செய்த புகார்கள் இல்லை. திமுக ஐடி பிரிவினர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கல்யாணராமன் வழக்கிலும் புகார் அளித்தது திமுக ஐடி பிரிவனர் தான்.

போலீஸ் மீது குற்றச்சாட்டு
இந்தியாவின் இந்த மோசமான இழப்பை கொண்டாடியவர்கள் எல்லாம் உள்ளனர். அதேபோல பாஜக பெண் நிர்வாகிகளை திமுக ஐடி பிரிவினர் ஆபாசமாகப் பேசுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக என்ற நிறுவனத்தை புரமோட் செய்ய இவர்கள் காவல் துறையைப் பயன்படுத்துகிறார்கள். இங்குக் காவல் துறை ஏவல் துறையாகவே உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க தவறும் எதற்கு டிஜிபி போஸ்ட் இங்கு எதற்கு? தேசவிரோத கருத்துகளை விதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு டிஜிபி என்பது வெறும் அலங்கார பதவியாக இருக்கிறது. தமிழக அரசின் அனைத்து உயர் அதிகாரிகளும் இதே நிலை தான். ஒரு அரசியல் கட்சியாக இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கா முடியாது. 2006-11 ஆட்சியிலும் இதைத் தான் நடந்தது. தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நிலங்களையும் இவர்கள் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்குவார்கள்.

மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு
மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு? மரிதாஸ் ஜாமீன் தொடர்பான வழக்கிலும் கூட இதைப் பேச்சு சுதந்திரம் என்றே நீதிபதி குறிப்பிட்டார். அதைவிட மோசமாக டிவி சேனல்களில் விவாதம் நடக்கிறது. பிரதமர் மோடி ஒரு கொலைக்காரர் எனச் சொல்கின்றனர். அதெல்லாம் தவறு இல்லையா? மாரிதாஸ் டெலிட் செய்த ட்வீட்டில் என்ன வார்த்தை தவறு? இதை விட மோசமான பல ட்வீட்கள் உள்ளன.

திமுகவுக்கு எச்சரிக்கை
அமைச்சர் வற்புறுத்தலால் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தற்கொலை செய்கிறார். வாராவாரம் இது தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் போலீசார் நடுநிலையாக இல்லை. இங்கு ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லை. திமுக அரசு ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. குற்றவியல் சட்டம் என்பது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். திமுக ஐடி பிரிவினர் பதிவிடும் புகார்களுக்கு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதை திமுக அரசு மறந்துவிடக்கூடாது.

பொறுமையாக உள்ளோம்
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் ஒருபோதும் பொய்யாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. இங்கு முரசொலிக்குச் சந்தா கொடுத்தவர்கள், திமுக சார்பில் போட்டியிட்டவர்களுக்குத் தான் அரசில் முக்கிய பதவிகள் அளிக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கட்சி பொறுமையாக இருக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications