'திமுகவினர் தலையீடே காரணம்..' தமிழகத்தில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கக் காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவதே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பாஜகவுடன் இணைத்துக் கொண்டனர்.

டிஜிபி சைலேந்திர பாபு
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, "தமிழக டிஜிபி பதவி என்பது நடுநிலையாக அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள எட்டரை கோடி மக்களுக்கும் நியாயம் நீதி வழங்கக்கூடிய பதவி. ஆகவே டிஜிபி சைலேந்திர பாபு நடுநிலையாக இருக்க வேண்டும். திமுக சமூக வலைத்தளங்களில் வரும் போஸ்ட் எப்படி இருக்கிறது? பாஜக எப்படி இருக்கிறது என நீங்களே பார்க்கலாம். இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் சமமாக இல்லை நடுநிலையாக டிஜிபி இருக்க வேண்டும்.

திமுக தலையீடே காரணம்
ஆளுங்கட்சி தலையீடு அனைத்து இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவது தான். மாநில, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் ஆளும் கட்சி என்று சொல்லிக்கொண்டு காவல்துறையினருக்கு இடையூறு செய்கின்றனர்.

பிரதமர் வருகை
ஆட்சியில் இல்லாத போது #Gobackmodi என்று சொல்லி இருந்தாலும் தற்போது ஆட்சியில் உள்ளார்கள். பிரதமரின் வருகையைத் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறோம்

குரு நில மன்னர்கள்
தமிழகத்தில் திமுகவினர் குரு நில மன்னர்கள் போல ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சி செய்கின்றனர். ஆனால் பாஜகவில் இந்த நிலை இல்லை. பாஜகவில் கடைசி நிலை தொண்டனும் முதல்வர் ஆகலாம்" என்று அவர் தெரிவித்தார்.

கேரளா படுகொலை
தொடர்ந்து கே எஸ் அழகிரி பாஜகவை விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், " கே எஸ் அழகிரி ஒரு பல்லில்லாத பாம்பாகக் கட்சியில் செயல்பட்டு வருகிறார். கட்சியில் தவறு செய்பவர்களைக் கூட கண்டிக்க முடியாமல் உள்ளார். அவருக்கு வாழ்த்துகள். கேரளாவில் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட பாஜக நிர்வாகி விவகாரத்திற்குத் தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

சீமான் வித்தியாசமான அரசியல்வாதி
கம்யூனிஸ்ட்கள் கேரளாவைக் கொலைகள் நடக்கும் இடமாக மாற்றி விட்டனர். கேரள முதல்வர் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும் சங்கி என்பது தவறான வார்த்தை என்று குறிப்பிட்ட அவர், சீமான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications