ஹை அலெர்ட்.. பாஜகவினருக்கு தலைமையில் இருந்து பறந்த மெசேஜ்.. “அமைதியா இருங்க.. எல்லை மீற வேண்டாம்”!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவினர் அமைதியாக இருக்குமாறு தமிழ்நாடு பாஜக தலைமையில் இருந்து அலெர்ட் மெசேஜ் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, நெஞ்சு வலியால் கதறிய அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்ததில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்தனர். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதிமுக மற்றும் பாஜகவினர், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை ஆதரித்துப் பேசி வருகின்றனர். மேலும், செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது பற்றி சந்தேகம் கிளப்பியும் வருகின்றனர். உச்சமாக, செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் கதறி அழுததை அதிமுக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், திமுகவினர் கொந்தளிப்போடு சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.

திமுக காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைமை, பாஜக நிர்வாகிகள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு தகவலை அனுப்பி உள்ளாராம். அதில், பாஜகவினர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளாராம்.
மேலும், இந்த நேரத்தில் எல்லை மீறி கடுமையான விமர்சனங்களைச் செய்ய வேண்டாம், எல்லோரும் அமைதியாக இருங்கள், அரசியல் விவகாரத்தை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை கட்சி பார்த்துக்கொள்ளும், நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அறிவுறுத்தியதாக இந்த தகவலை, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட, மண்டல அளவிலான நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு திமுகவை கடுமையாக விமர்சிப்பர்வர்களுக்குப் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications