சேது கால்வாய்: தமிழ்நாடு பாஜக அந்தர் பல்டி !அண்ணாமலை எதிர்க்க சட்டசபையில் நயினார் நாகேந்திரன் ஆதரவு!
சென்னை: சேது சமுத்திரம் அல்லது சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாக தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் இந்தியாவின் மானம் கப்பலேறி இருக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால், தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும். சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலுதான் முன்னெடுத்தார். ஆனால் அதனை பா.ஜ.க.தான் தடுத்து நிறுத்தியது என்று முதல்வர் ஸ்டாலின் குறை பேசினார். பெரும் கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு மணல் திட்டுகள் அதிகம் உள்ள ஆழ்கடல் பகுதியில் இருந்து மண்ணை அள்ளி, அதே கடலுக்குள் மிக ஆழமான பகுதியில் வீசவேண்டும். கடலுக்குள் இருந்து மண்ணை அள்ளி கடலுக்குள்ளே வீசுவதால், எவ்வளவு வேலை முடிந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கமுடியாது. இதற்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி செலவு பிடிக்கும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் கூட, ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டும் தான் இதன் வழியே செல்லமுடியும். அதாவது ஒரு வழி பாதையாக மட்டும்தான் கப்பல்கள் செல்லமுடியும். ஒருவேளை இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், எத்தனையோ பயன்களை டி.ஆர்.பாலுவும், தி.மு.க.வும் அடைந்திருக்கும் அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கும். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தை வணிக ரீதியாக சிறப்பாக எப்படி நடத்துவது? என்ற அடிப்படை சிந்தனை கூட இந்த அரசுக்கு இல்லை. ஆனால் இல்லாத துறைமுகத்தை பற்றி கவலை கொள்கிறார்கள். இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சேது சமுத்திர திட்டம் நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் மானம்தான் கப்பலேறி இருக்கும் என கூறி இருந்தார்.
ஆனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது பேசிய தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ., சேது கால்வாய் திட்டத்தை பாஜக வரவேற்கிறது; இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால் பாஜக மகிழ்ச்சி அடையும் என பேசியிருக்கிறார். இந்தியாவின் மானமே கப்பலேறிவிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த சேது கால்வாய் திட்டத்தை தமிழ்நாடு சட்டசபையில் ஆதரித்து பேசியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications