அனைத்து மாவட்டங்களிலும் சொந்த அலுவலகம்... பணிகளை துவங்கிய தமிழக பாஜக
சென்னை: தமிழக பாஜகவுக்கு அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் சொந்தமாக அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் மட்டும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் அமைக்க நாளை அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
அதில் பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் அவர் முக்கிய நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

வாடகை கட்டிடம்
தமிழக பாஜகவுக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சொந்தமாக கட்சி அலுவலகம் கட்டப்படவுள்ளன. இப்போது பெரும்பாலான ஊர்களில் வாடகை கட்டிடங்களிலும், கட்சி நிர்வாகிகளின் சொந்த இடங்களிலும் பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சொந்தமாக கட்சி அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அடிக்கல் நாட்டு விழா
நாளை திருவள்ளூரில் நடைபெறும் பாஜக சொந்த அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து நாளை 15 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. அனைத்து அலுவலகங்களும் ஒரே வடிவில் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல்
திருவள்ளூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை வரும் ஜே.பி.நட்டா, கமலாலயத்தில் வைத்து முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. அவர்களிடம் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, புதிய தலைவர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகள் ஆஜர்
ஜே.பி.நட்டாவின் சென்னை வருகையை முக்கியமானதாக பார்க்கிறார்கள் தமிழக பாஜகவினர். இதனால் அவர் முன்பு ஆஜராக அனைத்து மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சென்னை வரவுள்ளனர்.












Click it and Unblock the Notifications