மதுரை மெட்ரோ முதல் காலணி தொழிற்பூங்கா வரை.. மதுரைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?
சென்னை: 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், சென்னை மெட்ரோ திட்டங்கள் உள்ளிட்டவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மதுரைக்கான திட்ட அறிவிப்புகள் என்னவென்று காணலாம்.
மதுரை மாவட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள், டைடல் பார்க் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை மதுரை மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக மெட்ரோ ரயில் திட்டம் அமைந்தது. இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக ரூ.11.368 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் மதுரையில் 100 மின் பேருந்துகள் ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதுரை மாவட்டம் மேலூரில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் காலணி தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.275 கோடி மதிப்பில் 3 மாணவியர்கள் விடுதி சென்னை, மதுரை, கோவையில் தொடங்கப்படும். அதில் ஒன்று மதுரையில் தொடங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதுரை வெளிவட்ட சாலைக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. அதேபோல் மதுரை அருகே உள்ள கருத்தபுளியம்பட்டியில் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் அகர மொழிகளின் அருங்காட்சியகம் உலகத் தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications