சட்டசபை இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 13.. அதிமுகவுக்கு 9.. ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி!
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள் வந்துவிட்டது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மொத்தம் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 13 இடங்களில் வென்றதன் மூலம் சட்டசபையில் திமுக புதிய பலம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஐந்து வருட பாஜக ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 18ம் தேதி 18 தொகுதிக்கும், மே 19ம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

ஏன் தேர்தல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பும் எம்எல்ஏக்களுக்கு எதிராக வந்தது. அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த காரணத்தால் 18 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை இழந்தனர்.

காலி இடங்கள்
அதேபோல் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் மறைவு, திருவாரூர் தொகுதி எம்எல்ஏ திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக மொத்தமாக, 22 தொகுதிகள் காலியானது. இந்த 22 தொகுதிகளுக்குத்தான் இரண்டு கட்டங்கள் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகள்
இதில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று முடிவுகள்
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முழுமையான தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் வெளியானது. அதன்படி இந்த தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. அதிமுக கட்சி மொத்தம் 9 இடங்களில் வென்றுள்ளது.

அமமுக இல்லை
இந்த தேர்தலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்ட அமமுக எங்கும் வெற்றிபெறவில்லை. அமமுக கட்சி சில இடங்களில் டெபாசிட் இழந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றாலும், எங்கும் வெற்றிபெறவில்லை.

என்ன முடிவு
தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றதன் மூலம் தமிழக சட்டசபையில் அதிமுக 122 எம்எல்ஏக்கள் பலத்தை பெற்றுள்ளது. திமுக 110 எம்எல்ஏக்கள் பலத்தை கொண்டுள்ளது. சுயேட்சை ஒருவர் இருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மை பெற 118 இடங்களே தேவை என்பதால் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக 2021 வரை நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications