1100 எண்ணை அழைத்தால்.. குறைகள் தீர்க்கப்படும்.. முதல்வர் தொடங்கி வைத்த சபாஷ் திட்டம்!
சென்னை: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அது போல் கீழடி அகழாய்வு பணிகளையும் முதல்வர் குறைதீர்க்கும் திட்டத்தையும், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சி வரும் மே மாதம் நிறைவடைகிறது. இதனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வரும் சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இப்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 6 மாத இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடக்கும்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு இறுதி வடிவமும் கொடுக்கப்படவுள்ளது. அது போல் துறை ரீதியான புதிய திட்டங்கள், ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம்.
இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு பிறகு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணெலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை, உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உடனடியாக தீர்க்கப்படுவதற்காக உருவான திட்டம் இது.
1100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவித்தால், பிரச்சினைகள் உடனே தீர்க்கப்படும் திட்டமான முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் 12,110 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications