திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை தாக்கி இருவர் பலி.. இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்த முதல்வர்!
சென்னை: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை தாக்கி வாகனம் மற்றொருவரும் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் 2 லட்சம் ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளார்.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துச் செல்கிறார்கள்.

கடற்கரை ஓரம் இருக்கும் ஒரே ஒரு படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு திருவிழா காலங்களில் முருகப் பெருமானை வழிநடத்திச் செல்ல தெய்வானை என்ற 26 வயது மதிக்கத்தக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருவிழா காலங்களில் போது பெண் யானையான தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும். அப்போது பக்தர்களுக்கு யானைக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வாதம் பெறுவார்கள். இந்த யானையை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வருகிறார். இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகிலேயே சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் பக்தர்கள் கொடுக்கும் உணவால் யானைக்கு உடல்நல பிரச்சனை வரலாம் என்பதன் காரணமாக அதற்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று யானை கொட்டகை அருகே நின்ற போது யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார். அப்போது அவரது உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான கன்னியாகுமரியை சேர்ந்த சிசுபாலன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துக் தாக்கியது.
இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உதயகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் இழந்தார். யானை மிதித்ததால் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் யானைக்கு அருகே நின்றதாலும் அதனை தொட்டு செல்ஃபி எடுக்கு முயன்றதால் தன்னை வேறு யாரோ தொடுவதாக உணர்ந்து தெய்வானை பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்கு பிறகு தனது பாகனை கொன்றதை உணர்ந்த யானை தெய்வானை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் யானை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர்களும் யானை தெய்வானையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் திரு. உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் திரு.சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது.
இதில், திரு.சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும், பாகன் திரு.உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications