உச்சத்தில் கொரோனா பாதிப்பு... முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை.. அடுத்து என்ன?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி திருவிழாவும் நாட்டில் நேற்று தொடங்கப்பட்டது.

மீண்டும் தீவிரமடையும் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா காரணமாகச் சிகிச்சை பலனிற்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 12,908 பேர் பலியாகியுள்ளனர்.

முதல்வர் ஆலோசனை
இந்நிலையில், தமிழகத்தில் தற்போதைய கொரோனா பரவல் நிலைமை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், புதிய கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 12 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

புதிய கட்டுப்பாடுகள்
முன்னதாக வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது.. இபாஸ், பேருந்து பயணங்களில் கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் எனப் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த சனிக்கிழமை முதல் மாநிலத்தில் அமலுக்கு வந்தது.

தேர்தல் விதிகள்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்பதால் தற்போது காபந்து அரசே உள்ளது. பொதுவாக, தேர்தல் விதிகள் காரணமாகக் காபந்து அரசால் எவ்வித முடிவுகளையும் எடுக்க முடியாது. இருப்பினும், இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எவ்வித சிக்கலும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த விதிகளில் தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications