ஒடிசா விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற உதவிய வெங்கடேசன்.. ரியல் ஹீரோவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஷாலிமர் - சென்னை செண்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்த ராணுவ வீரர்கள் பலர், மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு பல பயணிகளை காப்பாற்றியுள்ளனர். உயிர் தப்பிய பலரும், ராணுவ வீரர்கள் செய்த உதவியைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்திருப்பதோடு, காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயிலில் இருந்த பலரை, ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள் காப்பாற்றியதாக விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர். விடுமுறைக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த ரயிலில் பயணித்தனர் என்றும் விபத்தில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட பலரையும் மீட்டனர் என்றும் உயிர் தப்பிய பயணிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பி-7 ரயில் பெட்டியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 39 வயது நிறைந்த வீரர் வெங்கடேஷ் என்பவர் விடுப்பில் சென்னைக்கு பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டி தடம் புரண்டாலும் மற்ற பெட்டியுடன் மோதவில்லை.
விபத்து குறித்து தான் பணியாற்றும் கொல்கத்தா பட்டாலியன் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தார் வெங்கடேசன். அதன் பின் என்டிஆர்எப் கட்டுப்பாட்டு அறைக்கும், விபத்து படங்கள் மற்றும் இருப்பிடம் பற்றிய விவரத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். வெங்கடேசன் கொடுத்த தகவல் அடிப்படையில் என்டிஆர்எப் முதல் குழு ரயில் விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.

மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவதற்கு NDRF வீரர் வெங்கடேசன் உடனடியாக கொடுத்த தகவலே காரணமாக இருந்துள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு வெங்கடேசனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய வீரர் வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன், ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications