கிரிஜா வைத்தியநாதனின் தந்தை.. ரிசர்வ் வங்கி Ex கவர்னர் வெங்கிடரமணன் மறைவு! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன் இன்று மறைந்த நிலையில், அவருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன்.. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ரிசர்வ் வங்கியின் கவர்னராக 22 டிசம்பர் 1990 முதல் 21 டிசம்பர் 1992 வரை பணியாற்றினார். இவர் ரிசர்வ் வங்கியின் 18ஆவது கவர்னராக இருந்தவர்.

இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் புதிய தாராளமய மற்றும் நவீனமய கொள்கை ஏற்றுக் கொண்டது. அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த வெங்கிடரமணன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். அவர் எடுத்த பல நடவடிக்கைகள் இந்தியாவில் நிலையான பொருளாதாரம் அமையக் காரணமாக இருந்தது.
இதற்கிடையே 92 வயதான வெங்கிடரமணன், கடந்த சில காலமாகவே வயது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையே இன்று வெங்கிடரமணன் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்றறிந்து வருத்தமடைந்தேன். இந்திய ரிசர்வ் வங்கியின் 18-ஆவது ஆளுநராகவும், அதற்கு முன்பாக 1985-89 வரையில் ஒன்றிய நிதித் துறைச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றவர் வெங்கிடரமணன்.
அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும், முன்னாள் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications