'படகு தேவை இல்லை..' மழை வெள்ளத்தை நடந்தே சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வெள்ளப் பாதிப்பு காரணமாகத் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2ஆம் நாளாக இன்றும் முதல்வர் ஸ்டாலின் நகரின் பல முக்கிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
தலைநகர் சென்னையில் நேற்று மதியம் திடீரென பெய்யத் தொடங்கிய மழை சுமார் 10 மணி நேரம் நீட்டித்தது. சென்னை வானிலை ஆய்வு மையமும் இந்தளவுக்கு மழை பெய்யும் எனக் கணிக்கவில்லை.
இதனால் சென்னைவாசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். நகரின் பல முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது தலைநகரே திக்குமுக்காடிப் போனது.

சென்னை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 24 செமீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 21 செமீ மழையும் பதிவாகியுள்ளது. நகர்ப் பகுதிகள் புறநகர்ப் பகுதிகள் என இரண்டிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சென்னை நகரமே, கடந்த மாதத்தைப் போல மீண்டும் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியது. நகரில் பல பகுதிகளில் மின் இணைப்பும் கூட பாதிக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள்
திடீரென கொட்டிய கனமழையால் முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் நகரில் பல இடங்களில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அண்ணா சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கனமழையால் வெள்ள நீர் தேங்கிய நிலையில், அதை அகற்றும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரடியாகக் களத்தில் இறங்கி, மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.

நள்ளிரவில் முதல்வர் ஆய்வு
இந்தச் சூழலில் நேற்று திருச்சியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினும் வெள்ள பாதிப்பு குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். மழை நீர் வெளியேற்றும் பணிகளையும் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதல்வர், வெள்ள பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் விரைவில் சீரமைப்பு பணிகள் முடியும் என எதிர்க்கப்படுகிறது.

2ஆம் நாளாக ஆய்வு
இந்நிலையில், இன்று 2ஆம் நாளாகவும் முதல்வர் ஸ்டாலின் நகரின் பல முக்கிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். சீரமைப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications