74வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: நாட்டின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதன்பிறகு காலை 8.45 நிமிடங்களுக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மாநில மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்த விழாவின்போது, கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றிய, தனிநபர், நிறுவனம், மருத்துவர், சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆண்டுதோறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாண வர்கள், பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்டம்தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்க சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர் களை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு பதக்கங்கள், சான் றிதழ்களை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய்த் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் யாரும் விழாவுக்கு நேரில் வரவேண்டாம். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.