தவறுகளை மூடி மறைக்க மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதா? பாஜக அரசு மீது தமிழக காங்கிரஸ் பாய்ச்சல்!
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என்றும் அதை மூடிமறைக்க நாடு முழுவதும் மதரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த பதிவின் விவரம் வருமாறு;

எதிர்காலம் கேள்விக்குறி
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்திய விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், உலக அரங்கில் இந்தியாவை ஒரு வல்லரசாக வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருகின்றன. இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகள்
2014 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதை மூடிமறைக்க நாடு முழுவதும் மதரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வகுப்பு கலவரங்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கின்றன. அதனால் இந்தியா வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வறுமை
பா.ஜ.க.வின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஏப்ரல் 2022 நிலவரப்படி, அதற்கு முந்தைய ஆறு மாதத்தில் 88.1 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

வேதனையும், அதிர்ச்சியும்
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற அதேநேரத்தில், இந்தியாவிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்கிற போது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது. இத்தகைய அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது.

சுதந்திர தின விழா
இந்த கடமையை உணர்ந்து பா.ஜ.க.விடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் இதற்கான முயற்சிகளில் அனைத்து மக்களும் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications