ஒரே மாதத்தில் 10 மடங்கு அதிகரித்த கொரோனா.. தமிழகத்தில் 100ஐ நெருங்கும் பாதிப்பு.. லாக்டவுன் வருமா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பல காலமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், இப்போது அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு இப்போது 100ஐ நெருங்குகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று முறை கொரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. வேக்சின், தடுப்பு பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து கட்டுக்குள் வந்தது.
கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவாகி வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

100 நெருங்கும் பாதிப்பு
இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு 30,700வரை சென்றது. அதன் பிறகு மெல்லக் குறைந்த கொரோனா கடந்த மாதம் பல நாட்கள் ஒற்றில் இலக்கில் கூட பதிவானது. கடந்த மாதம் 19ஆம் தேதி மாநிலத்தில் 8 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு பதிவானது. அதன் பிறகு மெல்ல கொரோனா அதிகரித்த நிலையில், மார்ச் 1ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 16 ஆகப் பதிவானது. இதனிடையே இப்போது வைரஸ் பாதிப்பு 100 நெருங்குகிறது. இதனால் எங்கு மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

10 மடங்கு அதிகரிப்பு
கடந்த மாதம் தினசரி பாதிப்பு 10க்கும் கீழ் இருந்த நிலையில், ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு 10 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3096 பேருக்கு கொரோனா டெஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. அதில் குவைத் நாட்டில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட 97 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35,96,110 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்
தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து அதிகரித்த வருகிறது. நேற்று மாநிலத்தில் 549 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 582ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகக் கோவையில் 131 பேரும் சென்னையில் 128 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 69 சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர எங்கும் ஆக்டிவ் கேஸ்கள் 50ஐ தாண்டவில்லை.

உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கூட உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை. கொரோனா வேக்சின் பணிகளால் உயிரிழப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,050ஆகவே உள்ளது. இன்று ஒரே நாளில் 64 டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,57,478ஆக உயர்ந்துள்ளது.

லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பில்லை
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 25 பேருக்கும் கோவையில் 21 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 15 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு எங்கும் 10ஐ தாண்டவில்லை. பாசிட்டிவ் விகிதம் இப்போது மாநிலத்தில் 3 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும் கூட, லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் தேவைப்படும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications