குட் நியூஸ்! 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 605 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தினசரி உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் தொடங்கி தொடர்ச்சியாகக் குறைந்தே வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அச்சம் காரணமாக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வைரஸ் பாதிப்புகள் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்தே வருகிறது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய 3 பேர், கானா மற்றும் பிரிட்டனில் இருந்து திரும்பிய தல 2 பேர் உட்பட மொத்தம் 605 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,40,411 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது. கோவை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகபட்சமாக 1.1%ஆக உள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 4 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். கோவையில் 2 பேரும் நாகை, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தல ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,686 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,270ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7,172ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 697 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,96,553 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் மட்டுமே தினசரி பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது. மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 126 பேருக்கும் கோவையில் 97 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் அரியலூர், கடலூர் உட்பட மொத்தம் 24 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. தென்காசி, மயிலாடுதுறை, நாமக்கல் மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.