தமிழகத்தில் இன்று வெறும் 575 பேருக்கு மட்டுமே கொரோனா. ஆக்டிவ் கேஸ்களும் 10,000க்கு கீழ் குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் வெறும் 575 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது

அதன் பின்னர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமாகக் குறையத் தொடங்கியது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே பாசிட்டிவ் விகிதம் மிகவும் குறைந்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அதில் 575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34,47,581 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 10,782ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 9,440ஆகக் குறைந்துள்ளது. இது தவிர இன்று ஒரே நாளில் மொத்தம் 1913 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,00,144ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,997ஆக உயர்ந்துள்ளது.
இன்று தலைநகர் சென்னையில் 144 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர மாவட்டத்தில் எங்கும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications