தமிழ்நாட்டில் இன்று 1929 பேருக்கு கொரோனா.. மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்கள் சற்று அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை நேற்றைவிட 20 அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுவார்களின் எண்ணிக்கை சுமார் 65 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாத இறுதி முதல் வைரஸ் பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், எங்கெல்லாம் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோ அங்கு மட்டும் கூடுதலாகக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 1.54 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கேரளாவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1929 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 119 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். கொரோனா பாசிட்டிவ் விகிதம் அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.7% ஆக உள்ளது. அதேபோல கோவை (2.4%), ஈரோடு (2.0%), தஞ்சை (2.5%), ஆகிய மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் சற்று அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழகத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.2% ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
இன்று மாநிலத்தில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 21 போர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதேபோல இன்று உயிரிழந்தவர்களில் 3 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 4 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,340 கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேநேரம் ஆக்டிவ் கேஸ்கள் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 20,407 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 20,427 ஆகச் சற்று உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் மாநிலத்தில் 1,886 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 25,22,470 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
அதேபோல மாவட்ட ரீதியான பாதிப்புகளில் இன்றும் கோவையிலேயே அதிகமாக உள்ளது. இன்று கோவையில் 235 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் இன்று 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு (178), செங்கல்பட்டு (107), ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications