குட் நியூஸ்..! தமிழகத்தில் 2000க்கு கீழ் சென்ற கொரோனா.. இந்த 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 59ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 1971 பேருக்கு மட்டுமே மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 மாவட்டங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதன்படி இன்றும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் 59ஆவது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளது. இன்று மொத்தம் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட மொத்தம் 1971 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 110 சிறார்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 25,37,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல மாநிலத்தில் இன்று 28 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 20 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள் ஆகும். மேலும் 50 வயதுக்குக் குறைவான 6 பேரும் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 33,752 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 27,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர இன்று மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 2558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,76,339 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகபட்சமாக 3.2%ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து தஞ்சையில் பாசிட்டிவ் விகிதம் 3.1%. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4% ஆக உள்ளது.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்றும் கோவை மாவட்டத்தில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இன்று 209 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் 147 பேருக்கும் சேலத்தில் 136 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிரச் செங்கல்பட்டு (116), ஈரோடு (122), தஞ்சை (108) திருப்பூர் (112) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
இன்று அதிகபட்சமாகத் தஞ்சை மாவட்டத்தில் நான்கு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து சென்னையில் மூன்று பேரும் கோவையில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் ஈரோடு, நெல்லை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.












Click it and Unblock the Notifications