கடைசி நொடி வரை திக்திக்.. தில்லாக "சண்ட" செய்த கமல்.. உருகவைத்த அந்த போட்டோ.. நேற்று என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் உட்பட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் எங்குமே வெற்றிபெறவில்லை என்றாலும், அக்கட்சி தனது முதல் சட்டசபை தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் செயலாற்றி உள்ளது. முக்கியமாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் "டஃப் பைட்" கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகளை தவிர மூன்றாவது அணியாக கருதப்பட்ட எந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. நாம் தமிழர், அமமுக, மநீம கணிசமான வாக்குகளை பெற்றாலும் கூட எங்கும் வெற்றிபெறவில்லை.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 8வது இடம்.. கிடைத்த ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா?
இந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மட்டுமே அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு கடினமான போட்டியாக இருந்தார். இவர் நின்ற கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே கடினமான போட்டி நேற்று நிலவியது.
எப்படி
நேற்று கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் - பாஜகவின் வானதி சீனிவாசன் - காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. மயூரா ஜெயக்குமார் சீனிலேயே இல்லை, அவர் போட்டியே கொடுக்க மாட்டார் என்று கருதப்பட்ட நிலையில் கடைசி மூன்று சுற்றுகளுக்கு முன்பு வரை மயூரா ஜெயக்குமார் 2வது இடத்தில் இருந்து கமல்ஹாசனுக்கு கடும் போட்டி கொடுத்தார்.
மாற்றம்
ஆனால் கடைசி 6 சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நிலவரம் மாறியது. வேகமாக முன்னேறி வந்த வானதி சீனிவாசன் மயூரா ஜெயக்குமாரை தாண்டி இரண்டாம் இடத்தை பிடித்தார். சில நிமிடங்களில் இன்னும் அதிக வாக்குகளை பெற்று முதல் இடம் வந்தார். கமல் வெறும் 150 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருந்தார்.
முன்னிலை
பின்னர் மீண்டும் 22வது சுற்றில் முன்னிலை பெற்ற கமல்ஹாசன் 43627 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். வானதி 43451 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்தார். ஆனால் போக போக வானதி 23, 24, 25, 26 சுற்றுகளில் அதிக வாக்குகளை பெற்று கமல்ஹாசனை முந்தினார். கடைசி சுற்றில் மொத்தமாக 52627 வாக்குகளை வானதி சீனிவாசன் பெற்றார்.
எத்தனை
இதில் 51087 வாக்குகள் பெற்று கமல்ஹாசன் வெறும் 1540 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதில் கடைசி 3 சுற்றுகளை எண்ண மட்டும் 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. அதிலும் ஒரு சுற்றை மீண்டும் எண்ணியதால் தாமதம் ஆனது. இதை எல்லாம் பொறுமையாக வாக்கு எண்ணும் மய்யத்தில் கமல்ஹாசன் அமைதியாக அமர்ந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார்.
அமைதி
அரசியல் வேறுபாடுகளை தாண்டி நேற்று வானதி சீனிவாசன் அருகில் அமர்ந்தபடி, அவரிடம் பேசிக்கொண்டே தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டு இருந்தார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததால் கொஞ்சம் சோர்வாக இருந்த கமல், கடைசி நொடி வரை விடாமல் நம்பிக்கையோடு காத்து இருந்தார். முடிவு எதிராக வந்ததும் பெரிதாக ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக அங்கிருந்து வானதிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வெளியேறினார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன் வெற்றி - தோல்வி என்பதை தாண்டி தன்னை ஒரு சிறந்த அரசியல் தலைவராக நிரூபித்து இருக்கிறார்.. கடைசி நொடி வரை ஒரு அரசியல் தலைவர் ஏன் "சண்ட" செய்யணும் என்பதை கமல் நிரூபித்து இருக்கிறார். வெற்றியோ, தோல்வியோ ஏன் களத்தில் நிற்க வேண்டும் என்பதை கமல் நிரூபித்து உள்ளார்..இவரின் அரசியல் வாழ்க்கையில் இது கண்டிப்பாக முக்கிய சம்பவம்.
வெற்றி தோல்வி
காலில் காயத்தோடு இவர் செய்த பிரச்சாரங்கள் தொடங்கி நேற்று கடைசி நொடி வரை கண்ணில் ஏக்கத்தோடு, இவர் காத்திருந்தது கண்டிப்பாக கமலின் அரசியல் எதிர்காலத்தில் முக்கிய புள்ளியாக இருக்கும்.. அரசியல் என்றால் தோல்விகள் சகஜம்.. காமராஜர், ஜெயலலிதா, மமதா, திருமா என்று பலர் தேர்தலில் தோற்று இருக்கிறார்கள்.. பின் மீண்டு வந்து இருக்கிறார்கள்.. தற்போது தோல்வி அடைந்த கமலும் எதிர்காலத்தில் தமிழக அரசியலில் 'மீண்டு' வருவார் என்று எதிர்பார்ப்போம்!