தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி.. மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு.. இன்று மீண்டும் விசாரணை
சென்னை: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான விசாரணை இன்று மீண்டும் வரவுள்ள நிலையில், அடுத்தக்கட்ட உத்தரவு ஏதேனும் பிறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும். இந்த 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்துல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கல்வி நிதி
அந்த மனுவில், நடப்பு கல்வியாண்டில் உடனடியாக தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.
3 ஆண்டுகள் நிலுவை
அப்போது தமிழக அரசு தரப்பில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசு வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு 2021ஆம் அண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இந்த 3 ஆண்டுகளில் மாநில அரசு மொத்த நிதியையும் ஒதுக்கி இருக்கிறது.
மே 28ல் ஆலோசனை
மத்திய அரசு நிதி அளிக்காததை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியில் அக்கறை இருப்பதால், மத்திய அரசு மீண்டும் நிதி ஒதுக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று மே 28ஆம் தேதி மாநில அரசு ஆலோசிக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
என்ன காரணம்?
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒதுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒதுக்க முடியவில்லை என்று பதில் அளித்தார். அப்போது நீதிபதிகள் என்ன காரணம் என்று கேள்வி எழுப்ப, தமிழக அரசு தரப்பில், மத்தியில் ஆளும் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் ஒரு எம்பி கூட இல்லை.
இன்று மீண்டும் விசாரணை
அதனால் நிதி ஒதுக்கப்படவில்லை என்று பதில் அளித்தார். இதன்பின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு என்பது தொடர்பான விவரங்களை மே 23 (இன்று) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். இதனால் இன்று மத்திய அரசு தரப்பில் நிலுவையில் உள்ள கல்வி நிதி தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications