ஓய்வு வயது அதிகரிப்பு சரியில்லை.. ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் தமிழக அரசு ஊழியர் சங்கம்
சென்னை: அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து, 59 ஆக உயர்த்தப்பட்டதை, ஒரு தரப்பினர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பு இதை எதிர்க்கிறது.
அரசு ஊழியர் சங்கம் இந்த உத்தரவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அரசுப் பணியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஓய்வு பலன்களை தள்ளிப் போடுவதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எடுக்கப்படாமல் இருக்கக்கூடிய விடுப்பை கணக்கிட்டு அந்த நிதி பலன் ஆண்டின் இறுதி காலத்தில் வழங்கப்படும். ஆனால் கொரோனா பிரச்சனையை காரணம் காட்டி அது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் பதவி உயர்வுக்காக காத்திருப்போர் மற்றொரு ஆண்டு கூடுதலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது. இதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, நாளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, பாதுகாப்பு எச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications