மூன்றாவது அலையை வேரறுக்க.. தமிழக சுகாதாரத் துறையின் சூப்பர் திட்டம்.. வொர்க் அவுட்டானால் செம!
சென்னை: வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்திற்காக இதுவரை முதல் டோஸ், இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை போடாதவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தினருக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு பல வெர்ஷன்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராகி வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறு மக்களிடம் அறிவுறுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் மக்கள் எளிதாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வாரந்தோறும் மெகா முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்த முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

31 சதவீதம்
இந்த நிலையில் AY.42 என்ற புதிய வேரியண்ட்டால் மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வருகிறது. தமிழகத்தில் 31 சதவீதம் பேர் கொரோனாவின் முதல் டோஸை கூட எடுக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அது போல் 29 சதவீதம் பேர் மட்டுமே இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டனர். முதல் டோஸ் செலுத்தியவர்களின் சராசரி 75 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

தமிழக அரசு
காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருப்பூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் 80 சதவீதம் பேர் முதல் டோஸ் போட்டுக் கொண்டனர். அது போல் வேலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு டோஸ் போட்டவர்களின் சதவீதம் 60 ஆக உள்ளது. இதுபோல் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டாததற்கு காரணம் அதன் பின்விளைவுகள் குறித்த பயம் ஆகும். இதை போக்க கவுன்சிலிங் கொடுக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி
எனவே வீடு வீடாக போய் தடுப்பூசியை செலுத்துவது என்ற திட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்கவுள்ளது. இதற்காக வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் செவிலியர்களிடம் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி அதை அறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தால் அவர்கள் அதை சுகாதாரத் துறைக்கு அனுப்புவர். பின்னர் சம்பந்தப்பட்டவர்களை அணுகி அவர்கள் தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யும். அவரவர் வீடுகளுக்கே சுகாதாரத் துறையினரை அனுப்பி தடுப்பூசி போடுவதுதான் சரி என தமிழக அரசு கருதுகிறது.

நிச்சயம் கை கொடுக்கும்
இதன் மூலம் தடுப்பூசி போடும் தயக்கத்தை தகர்த்தெறிய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகத்தினருக்கு அனுப்பி விட்டதாக தெரிகிறது. இனி வீடு வீடாக கணக்கெடுத்து தடுப்பூசி போடாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் அமல்படுத்தப்படும். தெருமுனையில் தடுப்பூசி முகாம் வைத்தும் தேவையில்லாத அச்சத்தால் மக்கள் போட தயங்குகிறார்கள். அவர்களுக்காக வீட்டுக்கே போய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிச்சயம் கை கொடுக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications