ஆளுநர் போக்கே சரியில்ல.. அரசியலமைப்புக்கே எதிரா நடக்குறாரு - சீரிய திருமாவளவன்
சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் பல்கலைக்கழகங்களை ஆளுநர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் இயங்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரயில்வே தொழிலாளர் முன்னணி, அம்பேத்கர் பெயரில் இயங்குவதாலும் விழா கொண்டாடுவதாலும் சிலர் மீது சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல.

ஹெல்லர் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடனே சென்னைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்து வருகிறது.
இந்திய ஒன்றிய அரசு கூடுதலாக தமிழத்தை நோக்கி வரும் அகதிகளுக்கு உதவி செய்ய வேண்டும். அகதிகளுக்கு உரிய பராமரிப்பு மற்றும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." என்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், "தமிழ்நாடு ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது. ஆளுநரின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு போகாமல் பல்கலைக்கழகங்களை ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஆளுநரின் இந்த போக்கு கைவிடப்பட வேண்டும். முதல்வர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. விரைவில் குணமடைய வேண்டும்.பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications