இல.கணேசன் சகோதரரின் சதாபிஷேகம்.. நவ.2 அன்றே நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் சதாபிஷேக விழாவையொட்டி நவம்பர் 2 ஆம் தேதியே அவரது சகோதரர் இல.கோபாலனை நேரில் சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு அடுத்த நாள் பணி நிமித்தமாக டெல்லி சென்றதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மணிப்பூர் ஆளுநரும் மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமாக இல கணேசன் உள்ளார். இவருடைய சகோதரர் இல கோபாலனின் 80 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடந்தது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் நடிகர் ரஜினிகாந்த், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஜி கே வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோடம்பாக்கம்
சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த இந்த சதாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காகவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்திருந்தார். இதையடுத்து தமிழக முதல்வரை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

செண்டை மேளம்
கேரள மாநிலத்தின் செண்டை மேளத்தை மம்தா பானர்ஜி வாசித்தார். இந்த நிலையில் இல கணேசன் இல்ல விழாவுக்கு வருகை தருமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பங்கேற்கவில்லை
இந்த விழா நடந்த போது இருவருமே சென்னையில் இருந்த போதிலும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி வெளியானது. சதாபிஷேக விழா நடந்த நாளன்று பெங்களூர் சென்ற அண்ணாமலை அன்றைய தினம் மாலையே சென்னை திரும்பிவிட்டார். சென்னையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த பாஜக நிர்வாகியின் இல்ல விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அது போல் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இல.கணேசன் இல்ல விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் விழா நடந்த நாளன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: இல.கணேசனின் இல்ல விழாவை ஆளுநர் புறக்கணிக்கவில்லை. கடந்த 3ஆம் தேதி பணி நிமித்தமாக டெல்லி செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஆளுநர், கடந்த 2 ஆம் தேதியே இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனை நேரில் சந்தித்து சதாபிஷேகத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்துவிட்டார் என ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இல.கணேசன் இல்ல விழா
அது போல் இல.கணேசனின் இல்லவிழாவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு போனில் அன்போடு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் மாலை நேரத்தில் அவரது வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அங்கு அவர்கள் இல்லை.

மம்தா வந்ததால் செல்லவில்லை- அண்ணாமலை
இல.கணேசனின் இல்ல விழாவிற்கு சென்றிருப்பேன். ஆனால் அந்த விழாவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வந்ததால் அங்கே செல்லக் கூடாது என்ற எண்ணமும் இருந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியால் பாஜகவினர் மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். இல.கணேசன் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் என்ற முறையில் அந்த மாநில முதல்வரை அழைத்துள்ளார். அதைப் பற்றி எனக்கு தனிப்பட்ட கருத்து இல்லை. ஆனால் இல.கணேசன் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன். அவருடைய அண்ணன் இல.கோபாலன் என் மீது தனிப்பட்ட பாசம் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications