"இந்தியாவிலேயே முதல்முறை.." தெறி மாஸ் பிளானை இறக்கும் தமிழ்நாடு அரசு.. உள்ளே வந்த சிங்கப்பூர்!
சென்னை: தமிழ்நாடு அரசு சிங்கப்பூர் உடன் இணைந்து நாட்டிலேயே முதல் நெட் ஜீரோ தொழிற்பூங்காவைச் சென்னை புறநகர்ப் பகுதிகளில் அமைக்க உள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ்நாடு இப்போது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே சிங்கப்பூர் அரசின் உதவியுடன் தமிழ்நாடு அரசு நெட்-ஜீரோ தொழிற்பேட்டை அமைக்கவுள்ளது.

இந்த தொழிற்பேட்டையில் மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. தொழிற்பேட்டை ஒன்று நெட் ஜீரோவாக அமைவது இதுவே முதல்முறையாகும்.
முதல்முறை: நெட் ஜீரோ தொழில் பூங்கா என்பது ஒரு உற்பத்தி வளாகமாகும், அங்கு க்ரீன் ஹவுஸ் வாயு வெளியேற்றம் முடிந்தவரை ஜீரோவுக்கு அருகில் வைக்கப்படும். தமிழ்நாடு அரசின் சிப்காட் மற்றும் சிங்கப்பூர்-இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (எம்டிஐ) ஆகியவை இணைந்து இந்த தொழில்துறை பூங்காவை உருவாக்கக் கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 மே மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அப்போது தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தொழிற்பூங்கா இன்னும் பிளானிங் ஸ்டேஜில் தான் உள்ளது, முதற்கட்ட பாலிசி ஆவணம் ஓராண்டில் ரெடியாகிவிடும் என்கிறார். தொழிற்பேட்டைக்கு முதலீடு செய்வது யார்.. இதில் நிதியுதவி செய்வது யார் என்பவை குறித்தெல்லாம் இதில் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
எங்கே அமைகிறது: வட சென்னை பகுதியில் இந்த தொழிற்பேட்டையை அமைக்க மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தலைநகர் சென்னை பல காலமாகவே எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் வலுவான இடத்தை கொண்டுள்ளது. நோக்கியா சாம்சங் எனப் பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையைச் சென்னையில் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில் ராஜ் கூறுகையில், "எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் நெட் ஜீரோ தொழில் பூங்காவை உருவாக்க முடியும் என நம்புகிறோம். இந்த துறையில் நாட்டிலேயே நாங்கள் தான் முன்னோடியாக இருக்க விரும்புகிறோம். இதற்கான பாலிசியை உருவாக்குவதில் இரு தரப்பும் நீண்ட ஆலோசனையை நடத்தி வருகிறது.. புவி வெப்ப மயமாதல், காற்று மாசு பிரச்சினைகளுக்கு இது மிக முக்கியமான தீர்வாக இருக்கும்" என்றார்.
தொழில் மயமான மாநிலம்: இந்தியாவிலேயே அதிகம் தொழில் மயமான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15% அதாவது 38,837 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் சிப்காட் மாநிலத்தில் 15,780 ஹெக்டேர் பரப்பளவில் 30 தொழில் பூங்காக்களை நடத்தி வருகிறது.. அடுத்த பத்தாண்டுகளில் 18,210 ஹெக்டேரில் மேலும் 20 தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து எம்ஐடி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் நிலையான வளர்ச்சி என்பது முக்கியமானது. இத்திட்டத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து இரு தரப்பும் ஆலோசித்து வருகிறோம். சிங்கப்பூர் நிறுவனங்கள் ஐடியாக்களை எங்களால் மேம்படுத்த முடியும்.. நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தொழில்நுட்பங்கள் எனப் பல விவகாரங்களில் நாங்கள் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
இந்தியாவின் இலக்கு: நெட் ஜீரோ தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் தயாரிப்புகள் வெளிநாட்டுச் சந்தைகளில் கூடுதல் மதிப்பைப் பெறும் என்றும் அவை முதலீடுகளை ஈர்க்க முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு கருதுகிறது. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தனது 2070க்குள் நெட் ஜீரோ என்ற இலக்கை அடைய வேண்டும் என்று உறுதியளித்துள்ளது. 2030-க்குள் கார்பன் வெளியேற்றத்தை ஒரு பில்லியன் டன்கள் குறைக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications