கொரோனாவால் பெற்றோரை இழந்த.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதி.. தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தவும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை வட்டியோடு வழங்கிடவும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. முதல் அலையைவிட 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக கொரோனா 2ஆம் அலையில் உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.
தமிழக அரசு உத்தரவு
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தவும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு (Task Force) அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.
5 லட்ச ரூபாய்
கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படும். அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
Array
இக்குழந்தைகளுக்குப் பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.
பெற்றோர் ஒருவரை இழந்தால்
ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பு நிதி செலுத்தப்படும். அதேபோல கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி உள்ளிட்டவை ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் கண்காணிக்கப்படும்.
அரசுத் திட்டங்களில் முன்னுரிமை
அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு வழங்கப்படும். மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள்
இதேபோல பல்வேறு மாநில அரசுகளும் குழந்தைகளைப் பாதுகாத்தும் கொள்ளும் பொறுப்புகளை தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது