ரேசன் டெண்டரில் ஊழல்..கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட.. 20ஆயிரம் டன் துவர பருப்பு டெண்டர் ரத்து
சென்னை: தமிழக அரசின் 20,000 டன் துவரம் பருப்பு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்த நிலையில், அந்த டெண்டரை தற்போது தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 20 ஆயிரம் டன் துவரம் பருப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. ஆன்லைன் மூலம் கோரப்பட்ட இந்த டெண்டர் நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது. தற்போது சந்தையில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு 143 ரூபாய்க்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது. மேலும், இந்த டெண்டரை தமிழக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 20,000 டன் துவரம் பருப்பு டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும், புதிய டெண்டர் கோரி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், இதன் மூலம் மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் வரையிலான இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தின் மீது சத்துணவுத் திட்டத்திற்கான முட்டை விநியோக டெண்டர் உள்ளிட்ட பல முறைகேடு புகார்களை அறப்போர் இயக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications