தமிழ்நாட்டில் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்தது.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு
இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஞாயிற்றுக்கிழமைகளில் (5-9-20 முதல்) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

மத வழிபாட்டுத் தலங்களின் தடை தொடரும்
ஏற்கெனவே அறிவித்தவாறு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

விடுதிகளுக்கு அனுமதி
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1-9-2021 முதல் 9.10,11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் (School and College Hostels) ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் (working men/women hostel) கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கேரளா மாணவர்கள்
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ. மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதைச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

கொரோனா வேக்சின்
செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதைத் தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள், வங்கி மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சமூக பொருளாதார நடைமுறைகள் தடையின்றி நடைபெற முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் ஊராட்சி பொறுப்பாளர்கள் மருத்துவத் துறையினர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைகள்
கடைகளின் நுழைவுவாயிலில் கை சுத்திகரிப்பான் கட்டாயம் வைக்கப்படுவதோடு தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளும் உரியக் காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவுவாயில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட்டிருக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி
மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் வீடுகளிலேயே வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத விழாக்களை முன்னிட்டு உறியடி போன்ற விளையாட்டுகளை பொது இடங்களில் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications