தமிழ்நாட்டில் உயரும் மினி பஸ் கட்டணம்? அரசு தீவிர பரிசீலனை.. என்ன காரணம்? வெளியான பரபர தகவல்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை: சமீப காலமாகவே அனைத்து விலைவாசியும் உயர்ந்து வரும் வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இயக்கப்படும் மினி பஸ்களின் கட்டணம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகம் நகரமயமாக்கல் ஆன மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலைகள் மிக அதிகமாக உள்ளது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் நகர்ப்புறங்களில் தான் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர இதுவே முக்கிய காரணமாகும்.

தமிழ்நாடு
இதனால் வேலைக்காகச் சொந்த ஊர்களை விட்டு வேறு நகரங்களில் இருக்கும் மக்கள் தமிழகத்தில் அதிகம். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலும் மற்ற ஊர்களில் இருந்து வரும் மக்களே அதிகம் வாழ்கிறார்கள். இதனால் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு பொது போக்குவரத்து ஆப்ஷன்களை வழங்குகிறது. குறிப்பாக, பேருந்து சேவையைச் சொல்லலாம். சென்னையில் அரசு பேருந்துகளும் மற்ற ஊர்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது.

பேருந்து சேவை
தமிழ்நாடு வளர்ச்சியடையப் போக்குவரத்து உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். மாநிலத்தில் எந்தப் பகுதியில் இருந்தும் தலைநகர் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து உட்கட்டமைப்பு சிறப்பாகவே உள்ளது. நகரப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் என்று பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசுக்குச் சொந்தமான நகரப் பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மினி பஸ்கள்
அதேபோல மக்கள் தொகை குறைவாக இருக்கும் கிராமங்களுக்கும் கூட பேருந்து சேவை சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், கடந்த 1997ஆம் ஆண்டு தமிழக அரசு கிராமப்புறங்களுக்கு மினி பேருந்து திட்டத்தைத் தொடங்கியது. இந்த மினி பேருந்துகள், சேவையில்லாத வழித்தடங்களில் 16 கி.மீ. வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே சேவை இருக்கும் முக்கிய சாலைகளில் 4 கி.மீ. செல்வதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

கோரிக்கை
இப்போது மாநிலம் முழுக்க 4,092 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல காலமாகவே இந்த மினி பஸ் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. தற்போது விலைவாசி உயர்ந்துவிட்ட நிலையில், மினி பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல முக்கிய சாலைகளில் அனுமதி தரப்பட்டுள்ள தூரம் குறைவாக உள்ளதாகவும் இதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மறுவரையறை
இருப்பினும், முக்கிய சாலைகளில் மினி பஸ்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ள தூரத்தை அதிகரித்தால்.. அது அதே வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தனியார் உரிமையாளர்களும் கூறுகின்றனர். இது அனைத்தையும் கருத்தில் கொண்டு மினி பஸ் திட்டத்தையே தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மறுவரையறை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டண உயர்வு
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மினி பஸ்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதோடு, கிராமங்களில் அதிக தூரம் செல்லும் மினி பஸ்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் முக்கிய சாலைகளில் மினி பேருந்துகளை செல்லும் தூரத்தை அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications