இனி நோ ஆன்லைன் கிளாஸ்..வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள்.. தேர்வு குறித்தும் அரசு முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் (Higher education institutions) இனி வாரத்தில் ஆறு நாட்கள் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. அப்போதும் சுழற்சிமுறையில் 50 விழுக்காடு மாணவர்களுடன் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேக்சின் பணிகளால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் கூட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதால், இனி சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகளைக் கட்டாயம் நடத்த வண்டும்.
இந்த பருவத்திற்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வுகளாக ஜனவரி 20க்கு பிறகு நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டி உரியப் பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி தேர்வுகளையும் நடத்திட வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வகுப்புகளை நடத்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications