ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிடிவாதம்... தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று காலாவதியாகிறது!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராத காரணத்தால் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்தன. இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியது. இந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அப்போது ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி, போக்கர் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன. அதேநேரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக விளக்கம் தருவதற்கும் தமிழக அரசு தரப்பில் ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கேள்விகளுக்கு தமிழக அரசும் 24 மணிநேரத்தில் பதில் அனுப்பியது.
ஏற்கனவே முந்தைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்துக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிரான ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு தரப்பில் 2-வது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆகையால் தமிழக அரசு முதலில் கொண்டு வந்த சட்ட திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு காலாவதி ஆகிவிட்டது. அதனால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றி இன்றுடன் 60 நாட்களாகிறது. இந்த மசோதாவுக்கு இன்று ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு எதிரான அவசர சட்டம் காலவதியாகிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.