சென்னையில் தனியார் பேருந்துகள்? அதுவும் இந்தாண்டே.. வெளியான பரபர தகவல்! எப்படி இயக்கப்படும்
சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பல ஆண்டுகளில் முதல்முறையாகச் சென்னையில் தனியார் நிறுவனங்களும் பேருந்துகளை இயக்க அனுமதி தர மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்குப் பலரும் பல விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பீக் ஹவர்களில் வெளியே சென்றால் நிச்சயம் குறிப்பிட்ட நேரம் டிராபிக்கில் சிக்க வேண்டிய சூழலே இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. இதைக் குறைக்கச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை
சாலைகளை விரிவாக்கம் செய்வதைக் காட்டிலும் பொதுமக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைப்பதன் மூலமே போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதே பல வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்காகவே சென்னையிலும் பஸ், மின்சார ரயில்கள், மெட்ரோ சேவை இருக்கிறது. ரயில்கள், மெட்ரோவை காட்டிலும் சென்னையில் மாநகர பேருந்து சேவை ரொம்பவே முக்கியமாக இருக்கிறது. கட்டணமும் குறைவு, சென்னையில் பெரும்பாலான பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இருப்பதால் பேருந்துகளைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர்.

பேருந்துகள்
இப்போது சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பெண்களுக்கு இலவச சேவை, முதியவர்களுக்கு இலவச சேவை, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், மாதாந்திர கட்டண பாஸ் என பயணிகள் வசதிக்காகப் பல வகையான திட்டங்களும் உள்ளன. அதேபோல தமிழ்நாட்டில் மற்ற நகரங்களில் தனியார் நிறுவனங்களும் கூட பேருந்தை இயக்க அனுமதி இருக்கிறது. இருப்பினும், சென்னையில் இப்போது அரசின் எம்டிசி சார்பில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தனியார் பேருந்துகள்
ஏசி உட்பட 4 வகை பேருந்துகளை எம்டிசி நிர்வாகம் இயக்கி வருகிறது. இதனிடையே பல ஆண்டுகளில் முதல்முறையாகச் சென்னையில் தனியார் நிறுவனங்களும் பேருந்துகளை இயக்க அனுமதி தர மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தலைநகர் சென்னையில் இயக்கப்படும் குறுகிய காலத்தில் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் மக்கள் பெரியளவில் பயன் பெறுவார்கள் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

1000 பேருந்துகள்
இந்தாண்டில் முதலில் 500 பேருந்துகளையும் இதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து 2025ஆம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது மாநகர் போக்குவரத்துக் கழகம் இயங்கி வரும் வழித்தடங்களிலும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. கிராஸ் காஸ்ட் கான்டிராக்ட் ( Gross Cost Contract) என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

எப்படி
இத்திட்டத்தின்படி பேருந்துகளை வாங்கி, பராமரித்து, இயக்குவது தனியார் நிறுவனங்களின் பொறுப்பாகும். இதில் தனியார் பேருந்துகளை இத்தனை கி.மீ இயக்கினால்.. இத்தனை ரூபாய் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.. அதன்படி ஒவ்வொரு நாளும் வசூலிக்கப்படும் தொகையைத் தனியார் பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்திடம் கொடுக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக இருந்தால்.. அது மாநகராட்சிக்குச் செல்லும். அதேநேரம் குறைவாக இருந்தால் இழப்பு தொகையை மாநகராட்சி தரும்.

சந்தேகம்
சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.. இருப்பினும், இத்திட்டம் குறித்து சிலர் சந்தேகங்களையும் எழுப்புகின்றனர். அதாவது இந்த தனியார் பேருந்துகளால் குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் முழுமையாக நிறுத்தவும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், முதியவர்கள், பெண்கள், மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் நிலையில், அது தொடருமா என்றும் தெளிவாகத் தெரியவில்லை என்று சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications