அடுத்தடுத்து அதிரடி காட்டும் சேகர்பாபு.. கோவில் நிலங்களின் ஆவணங்கள்.. நாளையே இணையதளத்தில் வெளியீடு!
சென்னை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியீடு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார்.
அதன்பின் சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும். அமைச்சரின் முயற்சியால் இந்த நிலம் மீட்கப்பட்டது.

ஆவணம்
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக, தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியீடு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் உள்ளது.

பணிகள்
இதற்கான உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டு இருக்கின்றன. வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "தமிழ்நிலம்" மென்பொருளோடு ஒப்பீடு செய்து கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி கோவில் நிலங்கள் எல்லாம் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

எவ்வளவு
மொத்தமுள்ள நிலங்களில் 72 விழுக்காடு நிலம் தற்போது இது போல பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 3,43,647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக இதுவரை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்கள் நாளை இணையத்தில் ஏற்றப்படும். 'அ' பதிவேடு / நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா என்று அனைத்து விவரமும் இந்த 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக இணையத்தில் பதிவேற்றப்படும்.

மக்கள்
மக்கள் இந்த விவரங்களை நேரடியாக இணையத்தில் பார்க்கலாம். இணைய பக்கத்தில் "திருக்கோயில்கள் நிலங்கள்" என்ற பகுதியில் கோவில் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இருக்கும். கோவிலுக்கு சொந்தமான ஒத்துப்போகும் இனங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். கோவிலின் பெயரிலேயே அணைத்து ஆவணம், உரிமை அனைத்தும் இருக்கும், மக்கள் இதை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications