சென்னை உட்பட சில பகுதிகளில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.. இலங்கை கடலில் சூறாவளி: புவியரசன் தகவல்
Recommended Video
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும், 30ம் தேதி முதல், 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 30, டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய கூடும்.

பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில், கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில், மேற்குறிப்பிட்ட 3 நாட்களில், மிதமானது முதல், கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த, மழை அளவைப் பொறுத்த அளவில் தாம்பரத்தில் 15 சென்டி மீட்டர் மழையும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 10 சென்டிமீட்டர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 8 சென்டிமீட்டர், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில், சூறாவளி காற்று வீச இருப்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு, மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில், தமிழகத்தில் 35 செ.மீ மழை பெய்யும். இந்த முறை, 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில், இந்த காலகட்டத்தில், 59 செ.மீ மழை பெய்யும். இந்த முறை 39 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் வட கிழக்கு பருவமழை குறைவுதான். ஆனால், இன்னும் 20 நாட்கள் உள்ளன. அப்போது மழை பெய்து, இந்த விகிதத்தை ஈடுகட்டவும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications