ஜெர்மனி தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்.. துபாயை தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டம்
சென்னை: ஜெர்மனியில் நாளை முதல் நடைபெற இருக்கும் தொழில் கண்காட்சியில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், சர்வதேச நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் MADE IN TAMILNADU என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

துபாய் எக்ஸ்போ
துபாய் எக்ஸ்போ தொழிற் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. 192 நாடுகள் கலந்துகொண்ட இந்த கண்காட்சியில் கடந்த மார்ச் 26, 27 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் அரங்கம் அமைக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டன. துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஜெர்மனி கண்காட்சி
இந்த நிலையில் நாளை (மே 30) அன்று ஜெர்மனியில் உலக புகழ்பெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe) என்ற தொழில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொழில் கண்காட்சியில் பல உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.

என்ன சிறப்பு?
இந்த கண்காட்சியில் நவீன கண்டுபிடிப்புகள், வெளியுலகிற்கு அதிகம் அறிமுகம் இல்லாத உள்நாட்டு தயாரிப்புகள், எதிர்காலத்துக்கு தேவையான கண்டுபிடிப்பு மாடல்கள், தொழில் திட்டங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படுவதுடன், புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படவும் இருக்கின்றன. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், பன்னாட்டு அரசு உயரதிகாரிகள் இதில் கலந்துகொண்டு பேச இருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் அரங்கம்
இதில் துபாய் எக்ஸ்போவை போன்றே தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஜெர்மனி கண்காட்சியில் அமைக்கப்படும் தமிழ்நாடு அரங்கத்தில் உற்பத்தில், ஆற்றல், லாஜிஸ்டிக்ஸ், நெட்வொர்க்கிங் போன்ற துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications