இன்று இரவே டெல்லி வரும் தமிழக கபடி வீராங்கனைகள்.. கைதான பயிற்சியாளர் நிலை என்ன? உதயநிதி விளக்கம்!
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் கபடி போட்டியின் போது ஏற்பட்ட மோதலில், தமிழக வீராங்கனைகள் யாரும் காயமடையவில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர் பாண்டியராஜன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இன்று இரவே மாணவிகள் டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் இடையில் கபடிப் போட்டி நடைபெற்றது. இந்த கபடிப் போட்டியின் போது தர்பாங்கா பல்கலைக்கழக மாணவிகள் ஃபவுல் அட்டாக் செய்த போது, நடுவர்கள் புள்ளிகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனை தமிழக கபடி வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது நடுவர் தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வீராங்கனைகள் ஒன்று சேர்ந்து பதில் தாக்குதல் நடத்தியதால், அந்த இடமே பரபரப்பாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் பாண்டியராஜன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் தமிழக அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து 36 வீராங்கனைகள் பங்கேற்க சென்றனர். அவர்களுடன் 3 மேலாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல் 3 பயிற்சியாளர்களும் சென்றனர். இன்று நடைபெற்ற கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்ததாக புகார் வந்தது.
உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசி இருக்கிறோம். இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் பாண்டியராஜனை காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரன் தொடர்பாக உடனடியாக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக அங்குள்ள ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த போட்டி நடக்கும் போது, புள்ளிகள் தொடர்பாக ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு, இரு அணிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சூழலை சரி செய்திருக்கிறோம். இன்றே வீரர்கனைகள் அனைவரையும் டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் பாண்டியராஜனும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு டெல்லி செல்லும் மாணவிகள் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்து கொடுக்கப்படும். மேலாளர் கலையரசியுடன் பேசிவிட்டேன். தமிழக வீராங்கனைகள் பாதுகாப்புடன் இருக்கின்றனர். மாணவிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சிராய்ப்புகள் மட்டுமே ஏற்பட்டதால், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications