கவனம் மக்களே.. 4 முக்கியமான தடைகளை கொண்டு வந்த தமிழக அரசு.. சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. பின்னணி!
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே சென்று பொருட்கள் வாங்கும் நேரம், இ பாஸ் விதிமுறைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் விதிகள் தீவிரப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கூடுதல் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 4 கட்டுப்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
முதல் விஷயம்
இந்த நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகளில் பின்வரும் கட்டுப்பாடுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல்வதாக தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள்அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வெளியே செல்ல முடியாது
மக்கள் பலர் 12 மணி வரை பொருட்கள் வாங்க செல்கிறேன் என்று சுற்றிய நிலையில் அதை தடுக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி 10 மணிக்கு மேல் பொருட்கள் வாங்கி வெளியில் செல்ல முடியாது. அதேபோல் தூரத்தில் உள்ள கடைகளுக்கு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள. அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தேநீர் கடைகள்
இரண்டாவதாக மக்கள் அதிகம் கூட்டமாக கூடிய நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல டீ கடைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
இ பாஸ்
மூன்றாவதாக, இ-பதிவு முறை (e-Registration) வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும். இது ஏற்கனவே இருந்த விதிதான் என்றாலும் கூடுதலாக, அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும்.
அதாவது மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இரவு நேரம்
நான்காவதாக, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு நான்கு முக்கியமான கட்டுப்பாடுகளை தமிழகத்தில் அமலுக்கு கொண்டு வந்து உள்ளது.