முக்கிய சில தளர்வுகள்.. மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை.. அதிரடி அறிவிப்பு வருமா?
சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் இதனால் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் சராசரியாக 5900 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏறக்குறைய இயல்பு நிலை திரும்பிவிட்டது.

ஆலோசனை நடத்தினார்
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் இதனால் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. லாக்டவுன் தளர்வுகள் குறித்து இன்று ஆலோசனை நடக்க உள்ளது. பொதுவாக தமிழக முதல்வர் லாக்டவுன் தளர்வுகளை அறிவிக்கும் முன் மருத்துவர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வார்.

வல்லுநர் குழு
என்ன மாதிரியான தளர்வுகளை கொண்டு வரலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை முதல்வர் பழனிசாமி பொதுவாக மேற்கொள்வார். மருத்துவ வல்லுநர் குழு தெரிவிக்கும் ஆலோசனைகளை பொறுத்தே தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் மருத்துவர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

கூடுதல் பேருந்துகள்
தமிழகத்தில் சில முக்கியமான தளர்வுகள் இதனால் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். தமிழகத்தில் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளையே இயக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதேபோல் தியேட்டர்கள் குறித்த அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

முக்கிய ஆலோசனை
நாடு முழுவதும் மீண்டும் தியேட்டர்கள் திறப்பு பற்றி காணொலியில் மத்திய உள்துறை செயலாளருடன் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை செய்கிறார்கள். தமிழக அரசு அதிகாரிகள் உடனும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இதனால் முதல்வர் பழனிசாமி தியேட்டர்களை திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வேறு என்ன தளர்வு
இன்னொரு பக்கம், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ பாஸ் ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையே ஏற்கனவே இ பாஸ் இல்லை. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் கூடுதல் ரயில்களை இயக்குவது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய உள்ளனர். ஆனால் தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications