ஊரடங்கு நீட்டிப்பா.. பிரதமர் முடிவை ஏற்க தமிழக அமைச்சரவை முடிவு- தலைமை செயலாளர்
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்க தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என இன்று பிரதமருடனான காணொலி காட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். ஒரு மாநிலத்தில் மட்டுமே ஊரடங்கை நீட்டிப்பதில் ஒரு பலனும் இல்லை என தெரிவித்தோம்.
எனவே ஊரடங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவை ஏற்பது என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சண்முகம் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவக் குழுவுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர், டாக்டர்கள் குழுவை சேர்ந்த டாக்டர் பிரதீபா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் பொது சுகாதாரம் மிக சிறப்பாக இருக்கிறது. அதை இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி பேசினோம்.

மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை அறை ஒதுக்கப்பட்டு உள்ளது, அதை பற்றியும் ஆலோசித்தோம். நோயாளிகளுக்கு, எந்த மாதிரி தேவை உள்ளது, அவர்கள் குடும்பத்தினருக்கு எந்த மாதிரி தேவை உள்ளது என்பது பற்றியும் பேசினோம் . இந்த பிரச்சனையை எதிர்கொள்வதில், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மிகவும் முக்கியம். அவர்களின் பாதுகாப்பு மிகுந்த முக்கியமும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.
இந்த மாதிரி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. எனவே இன்னமும் 14 நாட்களுக்கு இந்த லாக் டவுன் நீடிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை. இந்த 14 நாட்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தி கண்டறியப்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பிரதீபா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications