கோவை சம்பவம்.. ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகள்.. அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில்பாலாஜி அட்டாக்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகள் எண்ணுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என சந்தேகிப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார்.
கோவை சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது: கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை @CMOTamilnadu மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? இவ்வாறு அண்ணாமலை கூறியிருந்தார்.

ஆடு வேட குள்ளநரி
இதற்கு அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளளித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.

அமைதியான தீபாவளி
கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.

சாத்தான்கள் ஓதும் வேதம்
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். 'நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க' என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

கோவையில் நடந்தது என்ன?
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் முபின் என்பவர் உயிரிழந்தார். முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications