நேரம் பார்த்து! எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் ஸ்டாலின்! சூடுபிடித்த கோடநாடு கேஸ்! என்னாச்சு
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரமாக நடத்த தமிழ்நாடு போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லவும் தமிழ்நாடு போலீஸ் தயாராகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஆக பதவி ஏற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக தயாராகி வருகிறார். இதற்காக நேற்று தனித்தீர்மானம் கொண்டு வர எடப்பாடி தரப்பு முயன்றது. ஆனால் அதிமுக பொதுக்குழுவில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வர சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

ஒற்றை தலைமை
இதில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்படும், முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த தீர்மானம் எப்படி கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இந்த தீர்மானம் கொண்டு வரப்படவில்லை என்றாலும், கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் போலவே, மாபெரும் மரியாதையுடன் எடப்பாடி நடத்தப்பட்டார். பெரும்பான்மை நிர்வாகிகள் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து பொதுச்செயலாளர் போலவே நடத்தினர்.

கோடநாடு
இப்படிப்பட்ட நிலையில்தான் கோடநாடு வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது. எடப்பாடி சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடந்தது. கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதில் 5 தனிப்படை போலீசார் வெவ்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகிறது. தனிப்படை போலீசின் ஒரு பிரிவு இரண்டு நாட்களாக சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடந்தது.

கொலை மற்றும் கொள்ளை
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தோண்ட தோண்ட பூதங்களாக வெளி வந்து கொண்டு இருக்கிறது. சினிமாவில் காட்டப்படுவதை விட மோசமாக பல திருப்பங்களுடன் இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார். இவரின் மரணத்தை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் வெவ்வேறு தருணங்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

நீலகிரி
இந்த நிலையில்தான் நீலகிரி உதவி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் இன்று சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். 9 பேர் வழக்கில் ஆஜர் ஆனார்கள். ஏ3 தீபு இந்த வழக்கில் இன்று ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பாக இன்று நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் முக்கிய சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் பேசுகையில், இந்த வழக்கில் இதுவரை 257 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

257 பேரிடம் விசாரணை
இந்த கொலை கொள்ளை தொடர்பாக மேலும் விசாரணை தொடர்பாக விசாரிக்க வேண்டி உள்ளது. சயான் வாகனம் பற்றி விசாரித்து வருகிறோம். அந்த வாகனம் கேரளாவை சேர்ந்தது. இதனால் கேரளா செல்ல வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பலர் போனில் கர்நாடகாவில் உள்ளவர்களுடன் பேசி உள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட பலருடைய தொலைத்தொடர்பு விவரங்கள் மூலம் இதை கண்டுபிடித்து உள்ளோம்.

கேரளா
இதனால் வெளி மாநிலங்களில் வழக்கை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் வைத்தது. எனவே வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் கூடுதல் விசாரணைகளை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் பக்கத்து மாநிலங்கள் வரை சென்று அரசு விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடி கொடுக்குமோ என்று எதிர்பார்க்கபடுகிறது.

அறிக்கை ஸ்டாலின்
எதிர்க்கட்சியாக இருந்த போதில் இருந்தே திமுகவும், மு க ஸ்டாலினும் இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தினர். கோடநாடு கொலைகள், கொள்ளை விவகாரத்தில் எந்த வழியிலும் தப்பிக்க முடியாதபடி வசமாக மாட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு நாள் விடியும் போதும் விடிவு ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லையே என்று விழிபிதுங்கி மனம் வெதும்பிக்கொண்டு இருக்கிறார்.அவர் சிறைக்கு செல்வார் என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications