கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்: பாஜக நாராயணன்
சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை அருகே உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் காரில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. அதேநேரத்தில் காரில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் இருந்ததால் சதியா? எனவும் விசாரிக்கப்பட்டது.

ஜமேசா முபின்
இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என அடையாளம் காணப்பட்டது. கோவையை சேர்ந்த ஜமேசா முபின் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்திருந்தனர். மேலும் ஜமேசா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் சிக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1998 போல நாசவேலை சதியா?
இதனால் கோவையில் 1998-ம் ஆண்டைப் போல நாசகார குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஏதேனும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? என்ற சந்தேகம் வலுத்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைகளில் முபினின் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு இருக்கிறதா?
இச்சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோவையில் நேற்று முன் தினம் நடந்த மாருதி கார் வெடிப்பில் தொடர்புடையவர்களாக முகம்மது தல்கா, முகம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், ஃ பிரோஸ் இஸ்மாயில், முகம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இப்போது வரை இது சிலிண்டர் வெடித்த வழக்காகவே கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைந்து செயல்பட்டு ஐந்து பேரை கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிற அதே வேளையில், இதன் பின்னணியில் ஐ எஸ் ஐ எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் உள்ளனவா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.

முதல்வர் பேசாதது ஏன்?
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை @CMOTamilnadu மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications