பயங்கரவாத இடமாக கோவை- ஆதாரங்கள் அழிப்பு.. ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர் பேச்சுக்கு வெடித்த கண்டனங்கள்!
சென்னை: கோவையில் நிகழ்ந்தது குண்டுவெடிப்பு சம்பவம்தான்; முக்கிய உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ -விடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது கவலை தருகிறது.

பயங்கரவாதத்தில் அரசியல் கூடாது
மேலும் பயங்கரவாதத்தில் அரசியல் வேண்டாம் என்றும், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் என்றும், யாருக்கும் நட்பு இல்லை என்றும், அவர்களிடம் தயவு காட்டக் கூடாது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கார் குண்டுவெடிப்பை தீவிர பயங்கரவாதத் தாக்குதல் சதி என்று நிறுவியது தமிழக காவல்துறை என கூறியிருந்தார்.

ஆளுநரின் திட்டவட்டமான பேச்சால் சர்ச்சை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவரே, கார் சிலிண்டர் வெடித்ததை குண்டுவெடிப்புதான் என ஆணித்தரமாக கூறுகிறார்; முக்கிய உயர்மட்ட பயங்கரவாத சதித் திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது என திட்டவட்டமாக கூறுகிறார். அப்படியானால் என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்கிற விவரம் ஆளுநருக்கு தெரிந்திருக்கிறது; ஆகையால் எந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவாரா? என்கிற கேள்வியையும் சீனிஅர் பத்திரிகையாளர்கள் எழுப்பி உள்ளனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதில் கொடுத்திருந்தார். அந்த பதிலடியில், மாநில காவல்துறை ஒன்றிய அரசின் உளவு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் யாரும் இந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்தது கிடையாது என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. காவல்துறையுடன் இணைந்தே என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளனர் என்றார். மேலும் தேசிய புலனாய்வு முகமையுடன் இணைந்து ஆரம்பத்தில் இருந்தே தமிழக காவல்துறை பணியாற்றியுள்ளது என்பதுதான் ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்ற ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதில் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

கோவையை அவமதிப்பதா? சிபிஎம் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது" என்று தமிழக ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.ஒரு தனித்த நிகழ்வை காரணம் காட்டி, ஒட்டுமொத்த மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என புகழ்பெற்ற தொழில் - தொழிலாளர் நகரமான கோவையை அவமதிக்கும் விதமானது இந்த கருத்து.

ஆளுநரை களமிறக்கிய வெட்கமில்லா பாஜக
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமான முறையில் விசாரணை நடத்திய காவல்துறை - துப்பு துலக்கியுள்ளது. தொடக்கம் முதலே விசாரணையை சிதைக்கும் விதத்தில் பேசி வந்த பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. மக்களிடம் பதட்டத்தை கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம் என்ற பாஜக/ சங்பரிவாரத்தின் குறுகிய அரசியல் முயற்சி அறிவிப்பிலேயே பிசுபிசுத்துவிட்டது. கடந்த காலத்திலேயே 'அண்டா பிரியாணி' கலவரமும், தற்கொலையை கொலையாக சித்தரித்து பந்த் கலகமும் செய்த சங்கி சித்து விளையாட்டுக்களை மக்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர். எனவேதான், இப்போது வெட்கமற்ற முறையில் ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக. அவரும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பேசிக் கொண்டுள்ளார். மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார்.நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு பொருப்பற்று பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக் காட்டுகிறோம் எனவும் கூறியிருக்கிறார். ஆளுநரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications