தமிழகத்தின் வரலாற்றில் மதுவிற்பனையில் ஒரு நாளில் நடந்த உச்சபட்ச விற்பனை இதுவாகவே இருக்கும்!
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது அனேகமாக தமிழகத்தின் வரலாற்றில் மதுவிற்பனையில் ஒரு நாளில் நடந்த உச்சபட்ச விற்பனை நேற்று தான் இருந்திருக்கும். ஆனால் இன்று அந்த சாதனையை முந்தவும் வாய்ப்பு உள்ளது.
Recommended Video
ஏனெனில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 கோடியே, 40 லட்சத்து 80 ஆயிரம் பேர் மது அருந்த தேவையான மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளது. இந்த புள்ளி விவரம் சரியானது அல்ல என்றாலும், நேற்று நடந்த விற்பனைய ஒரு குவாட்டருக்கு 120 ரூபாய் என்று வைத்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட 3.40 கோடி குவாட்டர்கள் என்கிற அளவிற்கு வருகிறது.
அதாவது ஒருவர் ஒரு குவாட்டர் அருந்துகிறார் என்று வைத்துக்கொண்டால் 3 கோடியே 40 லட்சம் பேர் இந்த மதுவை அருந்த முடியும். அதாவது தமிழகத்தின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பாதி அளவிற்கு மது அருந்த முடியும். மது என்பது நேற்று ஆறாக ஓடியிருக்கிறது.

மதுவாங்க ஆர்வம்
நாளை முதல் லாக்டவுன் போட்டுவிட்டால் இனி மது வாங்க முடியாதே என்று அச்சத்தில் பலரும் மொத்தமாக வாங்கி உள்ளதே இதற்கு காரணம். வழக்கமாக தமிழகத்தில் 100 கோடிக்கு தான் மதுவிற்பனை நடைபெறும். ஆனால் நேற்று சென்னையில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

நீண்ட வரிசை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அனைத்து வகையான மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதன் காரணமாக நேற்று காலை கடை தொடக்கப்பட்ட நேரம் முதலே அதிகப்படியான மக்கள் கடைகளில் மது வாங்க வரிசைகளில் நின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேற்று மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

மரக்கட்டைகள் அமைப்பு
அதனைத் தொடர்ந்து மரக்கட்டைகள் அமைத்து சமூக இடைவெளியுடன் மதுவாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டன. 14 நாட்கள் ஊரடங்கு என்பதால், மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைத்துகொள்ளும் வகையில், மதுபிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றார்கள்..

தமிழகத்தின் மதுவிற்பனை
இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.100.43 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

புதிய சாதனைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை பைகளிலும், பெட்டிகளிலும் மதுபிரியர்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால், இன்று 500 கோடிக்கு மேல் விற்பனை ஆகவும் வாய்ப்பு உள்ளது. அதாவது மதுவிற்பனையில் தமிழகம் புதிய சாதனை (வேதனை) படைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications